Monday, October 9, 2017

அத்தியாயம் 6: ஸைக்கோ பாஸ்



ஞாயிறு மாலை ஏதாவது சினிமா போகலாமா என்று திட்டம் போட்டார்கள். அர்ஜுன் “அதுக்கு பதிலாக நாம வேற எங்கயாவது பொய், ஆற அமர யோசித்து நம்ம கனவு என்னன்னு டிசைட் பண்ணலாம் மச்சி” என்றான்.

மார்ட்டினும் அதை ஆமோதித்தான். மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள ஒரு டிரைவ் இன் ரெஸ்டாரென்ட் என்று முடிவு ஆனது. அவரவர் துவைப்பது, ரிப்போர்ட் எழுதுவது என்று சொந்த வேலையை பார்க்கச் சென்றார்கள்.

சாமியின் பாஸ் அடுத்த நாள் மதுரை விசிட் என்று மதியம் ஒரு மணிக்கு போன் செய்தார். “வெல்கம் சார்” என்றான் சாமி.

“நான் இன்னைக்கு ராத்திரி பதினோரு மணிக்கு மாட்டுத்தாவணி வந்துருவேன். நீ வந்து பிக்கப் பண்ணிக்கோ” என்று சாமியின் பாஸ் சொன்னார்.

“சார் பதினோரு மணிக்கா? நா வேணும்னா நீங்க ரெகுலரா தன்குற ஹோட்டல்ல ரூம் புக் பண்ணிர்றேன். நீங்க செக்இன் பண்ணிக்குங்க. நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு உங்கள மீட் பண்றேன் சார்”

“நோ. நோ. இன்னிக்கு நான் உன்கூட தங்கலாம்னு இருக்கேன்.”

“சார் என்னோட என் பிரிண்ட்சும் தங்கி இருக்காங்க. உங்களுக்கு வசதிப்படாது”

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். உன்கூட கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்”

“பதினோரு மணிக்கு மேலயா? சரிவராது சார். நாளைக்கே மீட் பண்ணுவோம்”

அவர் விடுற மாதிரி இல்ல. சாமியோட முகம் கொஞ்சம் டல் ஆனதை அர்ஜுன் பாத்துட்டான்.

“என்ன மச்சி. யாரு அந்த ஸ்டுப்பிட் பாஸா?”

“ஆமான்டா. அவன் இன்னிக்கு ராத்திரி பதினோரு மணிக்கு என்ன மாட்டுத்தாவணியில பிக்கப் பண்ணச் சொல்றான். அது மட்டும் இல்ல இன்னிக்கு இங்க தங்கப்போரானாம். எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறான்டா”

“இதுல்லாம் ரொம்ப ஓவர். இங்க வந்து தங்குறதுக்கு அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு” என்று பஞ்சாயத்தக் கூட்டினான்.

நால்வரும் கூடி இதுபற்றி பேசினார்கள். “அவன் வரட்டும் நான் பாத்துக்கறேன்” என்று மார்டின் சொன்னான். “இல்லைடா அவன் ஒரு மாதிரி” என்று சாமி மறுத்தான்.

அவர்கள் பேசிக்கொண்டே இருக்கும் பொது அர்ஜுனுக்கு ஜெயபால் போன் பண்ணினார். “என்னப்பா இன்னிக்கு என்ன ப்ளான்?” என்றார்.

“ஈவ்னிங் ஒரு ஹோட்டலுக்கு போய் ட்ரீம் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டே டின்னர் சாப்டலாம் என்று ப்ளான் பண்ணி இருந்தோம் சார். ஆனா..” என்று அர்ஜுன் இழுத்தான்.

“ஆனா என்ன?”

“சாமியோட பாஸ் ஒரு டார்ச்சர் பேர்வழி. அவன் இன்னிக்கு பதினோரு மணிக்கு மதுரை வர்றானாம். அதுமட்டும் இல்ல. அவன் இங்கேயே எங்ககூட தங்கப்போரானாம். அதுபத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்றான்.

“வாட் நான்சன்ஸ்? சாமி தனியா தங்கலைன்னு அவனுக்கு தெரியுமா?”

“நல்லாத் தெரியும் சார். அவன் சாமிய பழயபடி மேன்சனுக்கு போகச்சொல்லி வேற டார்ச்சர் பண்றான்”

“நீ சாமிக்கிட்ட போனக் கொடு”

“சார் சாமி பேசுறேன் சார்”

“ஹாய் சாமி, அர்ஜுன் சொன்னான். இது என்னப்பா புதுசா இருக்கு? உங்க கம்பெனில ஹெச்.ஆர் பாலிசி, அலவன்ஸ் எல்லாம் கிடையாதா?”

“எல்லாம் இருக்கு சார். இவன் ஒரு சைக்கோ. எல்லாரையும் அடிமைமாதிரி நடத்துவான். அவனுக்கு ஒத்து ஊதலைன்னா செமையா போட்டுப் பாத்துருவான் சார்”

“மை காட். இந்த காலத்துல இப்படியும் ஒரு பைத்தியமா? நீ ஒன்னும் கவலைப் படாத. எனக்கு ரெண்டு மணிநேரம் டைம் கொடு. திரும்ப கூப்புடுறேன்”

இந்த ஒரு போன் கால், அவர்களது மூடை கலைத்தது. அஷ்வின் “அவன் நம்பரக் குருடா. என்னன்னு கேட்டுடறேன்? என்றான்.

“அதெல்லாம் வேணாம்டா. ஜெயபால் சார் ரெண்டுமணி நேரத்துல கூப்புடுறேன்னு சொன்னார். வெயிட் பண்ணுவோம்” என்றான் சாமி.

இப்படியும் சில சைக்கோ மனிதர்கள் சேல்ஸ் ஜாப்ல உண்டு. தன்னை ஒரு சர்வாதிகாரி மாதிரி நினைத்துக் கொண்டு கீழே வேலை பார்ப்பவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். அவர்களுக்கு ஜால்ரா போடும் கூட்டத்திற்கு பொற்காலம்தான்.

பெரும்பாலும் இந்தமாதிரி மனிதர்கள், சுயநலவாதியாக, அடுத்தவர் உழைப்பை சுரண்டுபவர்களாக, மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்று விட்டுவிடக் கூடாது.

விற்பனைத் தொழிலில் நாம் சரியாக இருந்தால், இதுபோன்ற காமெடி கிறுக்கர்களுக்கு பயப்பட வேண்டியதில்லை. ஒருமுறை வளைந்து போகக் கற்றுக்கொண்டால், அப்புறம் வாழ்க்கை முழுதும் முதுகெலும்பு இல்லாமலேயே வாழ வேண்டியதுதான். சேல்ஸ் செய்பவர்களுக்கு மன உறுதி அவசியம். உங்கள் தன்மானத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் சாதரணமாக விட்டுவிடாதீர்கள். அதே சமயம் சற்று சமயோசிதம் அவசியம். வீண் சண்டை போட்டு உங்கள் எதிர்காலத்தை சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள்.

மதியம் நான்கு மணி. சாமியோட பாஸ் சாமிக்கு போன் செய்தார். “சாமி நான் இன்னிக்கு வரல. நாளைக்கு காலைல நம்ம டிஸ்ட்ரிபியூட்டர் ஆபீஸ்ல மீட் பண்ணுவோம்” என்று சொன்னார். அவரது குரலில் ஒரு கலவரம் இருந்ததை சாமி கவனிக்கத் தவறவில்லை.

அத்தியாயம் 5: மனதினுள் வெடிமருந்து


நால்வரும் ஜெயபால் சார் கொடுத்த அந்த டைம் சர்ட்டை ஆளுக்கு முப்பது காப்பி ஜெராக்ஸ் எடுத்து அதை ஸ்பைரல் பைண்டிங் செய்தார்கள். சாமி அதன் முதல் பக்கத்தில், “எனது காலக் கண்ணாடி” என்று எழுதினான்.

தினமும் இரவு தூங்கும் முன்பாக இந்த பயிற்சியை செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மார்டின் தவிர அனைவருமே தொடர்ந்து எழுதினார்கள். மார்டினின் புது வேலை அவனுக்கு எழுதும் ஆர்வத்தை கொடுக்கவில்லை. இது ஒரு சாக்குதான் என்றாலும், புதிய வேலையின் பளு ஒரு வகையில் இதற்கு காரணம்.

ஒருவாரம் சென்றது. அஷ்வின், சாமி, இருவரும் ஒருவாரத்திற்கும் முழுமையாக இந்த பயிற்சியை செய்திருந்தார்கள். அர்ஜுன் கடைசி இரண்டு நாட்கள் செய்யவில்லை. மார்டின் முதல் இரண்டு நாட்கள் தவிர மற்ற நாட்கள் எதுவும் எழுதவில்லை.

ஞாயிறு வந்தது. ஜெயபாலும் அவர்களை சந்திக்க முழு ஆர்வமுடன் இருந்தார். முன்பே பேசி வைத்தது போல, காலை 6 மணிக்கு அனைவரும் ஆஜராகி போன வாரம் போல வாக்கிங் போனார்கள்.

திரும்பியதும் முதலில், “உங்கள்ள யாரெல்லாம் போன வாரம் முழுவதும் டைம் மேனேஜ்மென்ட் லாக் பயிற்சியை செய்தீர்கள்?” என்று ஜெயபால் கேட்டார்.

அஷ்வினும், சாமியும் லேசாக ஹாய் சொல்வதுபோல கையை அசைத்தார்கள்.

“ஏதாவது மாற்றம் தெரிகிறதா?”

அஷ்வின்: “நிறைய நேரம் கிடைக்குது சார். தேவை இல்லாத ஒரே ஒரு விஷயத்தை கட் பண்ணினேன் அதான்”

ஜெயபால்: “எதை கட் பண்ணினீங்க என்று தெரிஞ்சுக்கலாமா?”

அஷ்வின்: “லேட்டா தூங்குறது”

“சூப்பர் அஷ்வின். இது ஒரு முக்கியமான பழக்கம். நமக்கு சீக்கிரம் தூங்குற பழக்கம் அவசியம். இது சேல்ஸ் வேலையில இருக்குற பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக மேன்ஷன்ல தங்கி இருக்குறவங்க லைப் இதுனாலேயே ஸ்பாயில் ஆகிருது. இதனோட முக்கியத்துவத்தை நீங்க உணரனும்” என்றார் ஜெயபால்.

சாமி தனது வேளையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சொன்னான். “சார் நான் தினமும் ரிபோர்ட் அனுப்பனும். வாரம் ஒருமுறை சேத்துவச்சு அனுப்புவேன். அப்படி செய்யும்போது நிறைய குழப்பம் வந்து, மாத்தி மாத்தி அனுப்புவேன். சொல்லி சொல்லி என் பாஸ் வெறுத்தே போய்ட்டார். போன வாரம் டெய்லி ரிபோர்ட் அனுப்பினத பார்த்து அவர் ரொம்பவே சந்தோஷமாய்ட்டார். என்னத் தவிர என் கலீக்ஸ் எல்லார்ட்டயும் இதப்பத்தி சொல்லிருக்கார் சார்.”

“வெரி குட். இந்த வாரம் ரெண்டு விஷயம். நீங்க நாலு பேருமே, விடாம முதல் பயிற்சியை செய்யனும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் அவசியம். ரெண்டாவது விஷயம், உங்கள் டார்கெட் பற்றியது.”

“டார்கெட் என்ற வார்த்தை சேல்ஸ் ஜாப்க்கு மட்டும் கிடையாது. கூட்டில் இருந்து புறப்படும் பறவை முதல், செருப்பு தைக்கும் தொழிலாளி வரை, ஏன் உங்க அம்மாக்கு கூட டார்கெட் இருக்கிறது. அவங்க காலை சரியான டயத்துக்கு எந்திரிச்சு சரியான டயத்துக்குள்ள சாப்பாட்டை ரெடி பன்றாங்க இல்லையா?”

“சேல்ஸ் வேலைல இருக்றவங்கள்ள ரெண்டு டைப். ஒன்னு டார்கெட்ட பத்தி எல்லாம் யோசிக்காம, மத்தவங்க செய்றத கம்பேர் பண்ணி அவனைவிட, இவனைவிட என்று வாழ்க்கைய வேஸ்ட் பண்றவங்க. இவங்க எப்போதும் தன்னைவிட எத்தனைபேர் குறைவா பிஸ்னஸ் செஞ்சிருக்காங்க அப்டின்னு மட்டுமே பார்ப்பாங்க. இதுல உங்கள்ள யாராச்சும் இருந்தீங்கன்னா மாறிடுங்க. இல்ல, எங்கிட்ட வராதீங்க” என்று சற்று கடுமையா சொல்லிவிட்டு தொடர்ந்தார்.

“ஏன் சொல்றேன்னா, என் முதல் 5 வருஷம் இப்படித்தான் ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாம வேஸ்ட் ஆகிருச்சு. ரெண்டாவது ராகம் டார்கெட்ட மட்டும் குறிவச்சு வேலை செய்றவங்க. இவங்க வளர்ச்சி ரொம்ப ஸ்பீடா இருக்காது. சான்ஸ் இருந்தா இவங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். இல்லைன்னா, இவங்களவிட யார் அதிகம் பிஸ்னஸ் செய்றாங்கலோ, அவங்களுக்கு சான்ஸ் போயிரும் இல்லையா?”

“ஆமாம் சார். அஷ்வின் போன வருஷம் டார்கெட்டுக்கு மேல பதினான்கு பர்சன்ட் செஞ்சான் சார். ஆனா இவனுக்கு இன்கிரீமென்ட் மட்டும் கொடுத்துட்டு, மெட்ராஸ் பையன் ஒருவனுக்கு ஏரியா மேனஜர் ப்ரோமோஷன் கிடைச்சது. அவன் இவன விட வெறும் பன்னெண்டு பர்சன்ட்தான் கூட பிஸ்னஸ் செஞ்சான். என்னாடா அஷ்வின்?” என்று மார்டின் சொன்னான்.

“வெரி குட் எக்ஸாம்பில். இப்போ வெறும் பதினஞ்சு பர்சன்ட் டிப்பாரன்ஸ்ல அஷ்வினோட சேம் பொசிஷன்ல இருந்தவர் இப்போ மேனஜர். இவர் அந்த பொஷிஷனுக்கு போகுரத்துக்கு அடுத்த அப்பரைசல் வரை அதாவது அடுத்த சான்ஸ் வரை காத்து இருக்கணும். அடுத்து மேல வேக்கன்சி இல்லைன்னா பல வருஷம் காத்து இருக்கணும். என்ன அஷ்வின்?”

“யூ ஆர் கரெக்ட் சார்”

“ஸோ, அஷ்வினுக்கு முன்னாடி ப்ரோமோஷன் ஆனவர், இப்போ மட்டும் இல்ல, எப்போவுமே அவருக்கு சீனியரா இருப்பார். அடுத்த ப்ரோமொஷனுக்கு சீனியாரிட்டி பாக்கைல அவர் முன்னாடி இருப்பார் இல்லையா?”

“எஸ் சார்”.

“இதுக்கு ஒரே வழி, நீங்க டார்கெட்ட மதிக்கவே கூடாது. அதுக்கு பதிலா உங்க கனவை காதலிக்கணும். முக்கியமா, உங்க கனவு உங்க டார்கெட்டுக்கு ரொம்ப தூரத்துல, அதைவிட அதிகமா இருக்கணும்”
“சூப்பர் சார்” என்றான் அர்ஜுன்.

“டார்கெட் என்கிறது அடுத்தவன் உங்களுக்கு கொடுக்கிறது. இது லேபர் மைன்ட் உள்ளவங்களுக்கு பொருந்தும். அம்பிஷன் என்பது கனவு. இது உங்களுக்கு நீங்க கொடுத்துக்கிறது. இதுதான் லீடர் மைன்ட்.”

“இன்னும் ஒருவாரம் டைம் எடுத்துக்குங்க. உங்களோட அம்பிஷன் என்னங்கிறத முடிவு பண்ணுங்க. அடுத்த வாரம் சந்திக்கும் போது நீங்க எல்லோரும் மனதளவுல லீடர் ஆகி இருக்கணும். முதல்ல மனசுல என்னவா நீங்க ஆகுறீங்களோ, அதுவாத்தான் நிஜத்துலயும் ஆவீங்க”.

“நான் ரொம்ப ஸ்லோவா போற மாதிரி தெரியும். ஆனா, ஒரு நல்ல, நிரந்தர மாற்றத்தை கொண்டு வரணும்னா அதுக்குண்டான டயத்த செலவழிக்க தயாரா இருக்கானும்” என்று தனது இந்த வார மெசேஜ்ஐ தெளிவா சொன்னார்.

“சார். என்னால நீங்க கொடுத்த முதல் பயிற்சியை செய்ய முடியல. மன்னிச்சுருங்க. நெக்ஸ்ட் டைம் நோ எக்ஸ்கியூஸ்” என்று மார்டின் சொல்ல அர்ஜுனும் ஆமோதித்தான்.

வெளியே வந்ததும் நால்வரும் ஒரு டீக்கடைக்கு சென்றார்கள். நீண்ட நாட்களாக விட்டு இருந்த சிகரெட் ஒன்றை அஷ்வின் வாங்கினான்.

“என்னடா மச்சி?” என்று அர்ஜுன் கேட்டான்.

“ஜெயபால் சார் சொன்னதப் பத்தி நான் யோசிக்கவே இல்லடா. இனிமே எப்பவுமே அவன்தானே (ப்ரோமோஷன் வாங்கியவர்) சீனியர்? அவனுக்கு அப்பறம் தானே நான்? இன்னும் எவ்வளவு வருஷம் காத்து இருந்தா இந்த மாதிரி ஒரு சான்ஸ் வருமோ தெரியல. பேசாம ரிசைன் பண்ணிட்டு வேற கம்பெனில ஜாயின் பண்ணி புதுசா ஆரம்பிக்க வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொண்டே சிகரட்டை பற்ற வைத்தான் அஷ்வின்.

“டேய், இதப்போய் எண்டா நெகடிவா பாக்குற? புது கம்பெனில ஜாயின் பண்ணினா உடனே உனக்கு முதல் மரியாதையா குடுப்பாங்க? இங்க உனக்கு இருக்குற பெர்பார்மர் பெயர சும்மா விட்டுராதடா. அங்க போய் செய்றத விட உனக்கு தெரிஞ்ச இந்த கம்பெனில நல்லாவே செய்யலாம்” என்று பத்து செகன்ட் மார்டின் ஜெயபாலாகவே மாறினான்.

சிகரெட்டை தூக்கிப் போட்டுட்டு, “சரிடா மச்சி. எங்க தொலைச்சோமோ அங்க தான் தேடனும். போன வருஷம் விட்டத, இங்கயே, இந்த வருஷமே புடிச்சுக் காட்டுறேன். மேலயும் போய் கனவைத் தேடி அலையப் போறேண்டா” என்று அஷ்வின் சற்று உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்.

மற்றவர்களுக்கும் உள்ளுக்குள்ளே எதோ வெடிமருந்து திணித்தாமாதிரி இருந்தது.



அத்தியாயம் 4: முதல் விடியல்


நால்வரும் சேர்ந்து ஒரு ஞாயிறு அவரிடம் சென்று தங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி வழிகாட்டுமாறு கேட்கலாம் என்று நினைத்தார்கள். அர்ஜுன் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்து தங்கள் ஆசையைப் பற்றி கூறினான்.

“நான் எதிர்பார்த்தேன். சீக்கிரமாகவே இந்த முடிக்கு வந்துருக்கீங்க. பாராட்டனும். சரி வர்ற ஞாயிறு நீங்க நாலுபேரும் என் ரூமுக்கு காலை 6 மணிக்கு வந்துருங்க.” என்றார்.

காலை 6 மணி என்றதும் அவர் எதோ ஒரு வித்தியாசமானவர் என்பதை உறுதிப்படுத்தியது. யாருமே 10 மணிக்கு மேல தான் வரச்சொல்லுவாங்க எவர் என்னாடா 6 மணிக்கே வரச்சொல்றார்? என்று ஒருவருக்கு ஒருவர் பாசிடிவாக பேசிக்கொள்ள துவங்கிவிட்டார்கள். நம்மளுக்கு ஒருவரை பிடித்து விட்டால், அவர் என்ன செய்தாலும் சூப்பர் போடுவது மனித இயல்பு.

காலை 6 மணிக்கு அனைவரும் ஆஜர். “சரி வாக்கிங் போலாமா?” என்று கேட்டுக்கொண்ட ஜெய் தனது ஷூவை மாட்டினார். அனைவரும் “ஓகே” சொல்லி புறப்பட்டார்கள். ஹோட்டல் வெளியே வந்து, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து திரும்பினார்கள். வழியில் நிறைய பொது விஷயங்கள் பேசினார்கள்.

ஹோட்டலுக்கு திரும்பியதும் அவரவர் விருப்பப்படி டீ, காபி வரவழைக்கப்பட்டது. பின் ஜெய் ஆரம்பித்தார்.

“ஒவ்வொரு நாளும் முக்கியமானது. ஒரு நாளை நாம் வீணடித்தால், நமது வெற்றி ஒரு நாள் தள்ளிப் போகும். ஸோ, ஒரு நாளோட ஆரம்பம் ரொம்ப உற்சாகமா இருக்கணும். நாமும் உங்க வயசுல 7 மணி வரைக்கு தூங்கி, ஒரு டீ சாப்ட்டு, பேப்பர் படிச்சு, அப்டீன்னு ரொம்ப ஸ்லோவாத்தான் ஒவ்வொரு நாளையும் ஆரம்பிப்பேன். அப்புறம் ஒரு நாளோட ஆரம்பத்தின் இம்பார்டன்ஸ் தெரிய ஆரம்பிச்சதும் ஏதாவது ஒரு ஆக்டிவ் துவக்கம் கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன்”.

“இப்ப பாருங்க ஒரு உற்சாகம் வந்துருக்கு. இப்படியே ஒரு நாள் பூராவும் இருக்க அதிகாலைத் துவக்கம் ரொம்ப அவசியம். இன்னிக்கு சண்டேங்கறதால 6 மணி. மற்ற நாள்ல 5.30 மணிக்கு வாக்கிங் போய்டுவேன்.” என்றார்.

ஒரு பிரிண்ட் ஆன A4 சைஸ் பேப்பரைக் கொடுத்து, “நேத்து எந்த டைம்ல என்ன பண்ணினீங்க என்று எழுதுங்க” என்றார். அந்த ஷீட்ல காலை 5 மணி என்று தொடங்கி, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடம் இருந்தது. இரவு 10 மணிவரை எழுதும்படி இருந்தது.
டைம்
என்ன செய்தீர்கள்?
எந்த வகை
5 ~ 6 am



இப்படி இருந்தது. அதை எழுத தொடங்கிய உடனே, அர்ஜுன் “எந்த வகை” அப்டின்னு இருக்கே சார் அதுல என்ன எழுதணும்? என்றான்.

"டோன்ட் ஒர்ரி அபௌட் தட். பார்ஸ்ட் என்ன செய்தீங்கன்னு எழுதுங்க" என்றார்.

பத்து நிமிடங்களில் அதை எழுதி முடித்தார்கள். அதற்கு அப்புறம் ஜெய் ஒரு எழுதும் பேட் எடுத்து அதில் நான்கு சதுரங்களை வரைந்தார்.










அவற்றை இந்த படத்தில் உள்ளதுபோல எழுதினர். பின்னர், “இந்த நான்கும் நான்குவகையான வேலைகள். நமது வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடமுடியும். இவற்றில் எந்த வகையான காரியங்களை நீங்கள் அதிகம் செய்ய விரும்புகிறீர்கள்” என்றார்.

அர்ஜுன் “ABC” என்றான்.

சாமி “AC” என்றான்.

மார்டின் “A” என்றான்.

அஷ்வின் ஒன்றும் பேசாமல் தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தான்.

“என்ன அஷ்வின், உங்களுக்கு ஒன்றும் தோனலையா?” என்றார்.

“நம் வாழ்வில் எதையும் ஒதுக்க முடியாதே சார்? சில நேரங்களில் அவசரமில்லை அவசியமில்லை என்றாலும் பிறருக்காக நாம் அப்படியான காரியங்களை செய்வது அவசியமாகிறதே சார் அதுதான் ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் “ABCD” நான்கையும் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றான் அஷ்வின்.

“அஷ்வின் சொல்வது சரிதான். சமூக விளங்காக இருக்கும் நம்மால் எதையும் ஒரேடியாக விளக்க முடியாது. ஆனால் நமது வெற்றி என்பது எவற்றை நாம் அதிகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அமையும்.”

“அனைவருமே A என்ற கட்டத்தை தேர்வு செய்தீர்கள். அது ஆபத்தான கட்டம். மக்களில் பெரும்பாலானவர்கள் அவசிய வேலைகளை முன்பே செய்யாமல் அதை அவசரம் மற்றும் அவசியமாக மாற்றி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. உதாரணத்திற்கு உங்கள் மாதத் தவணைக்கான தேதி தெரியும். அதை 5 நாட்களுக்கு முன்பு தயார் செய்து வங்கியில் செலுத்தினால் அது அவசியம் ஆனால் அவசரமில்லை என்ற கட்டத்தில் இருக்கும். மாறாக கடைசி நாள் நீங்கள் பணத்தை கட்ட முற்பட்டால், அதனால் உங்களுக்கு வேண்டாத டென்ஷன் உண்டாகும். இந்த டென்ஷன் உங்களது மற்ற வேலைகளையும் பாதிக்கும்.”

“நமது முதல் பாடம், நீங்கள் அனுப்ப வேண்டிய ரிப்போர்டாக இருந்தாலும் சரி, ஈமெயிலாக இருந்தாலும் சரி, பில்லாக இருந்தாலும் சரி. அவற்றை அவசரமாக மாற்றாமல் முன்னரே செய்து பாருங்கள். ஒரு நாள் என்பது உங்களுக்கு மிக அற்புதமாக இருக்கும். தரமான வேலைகள் செய்ய நிறைய நேரம் கிடைக்கும்”

“ஸோ, நீங்கள் ஒவ்வொரு செயலையும் C என்ற இடத்திலேயே முடிக்கப் பாருங்கள். பெரும்பாலும் சேல்ஸ் வேளையில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் A என்ற நிலைக்கு வந்த பின்னரே தொடுவார்கள். கேட்டால், சேல்ஸ் வேலையே டென்ஷன் வேலையப்பா என்று அலுத்துக் கொள்வார்கள்.”

“இப்பொழுது நீங்கள் பூர்த்தி செய்த பேப்பரில் கடைசியில் இருக்கும் “எந்த வகை” என்ற இடத்தில், ஒவ்வொரு மணிக்கு நேராக அந்த வேலை ABCDயில் எந்த வகை என்று எழுதுங்கள். இதை தினமும் ஒரு மாதத்திற்கு எழுதி வாருங்கள், மேஜிக் நிகழும்” என்று நிறுத்தினார்.

நால்வரும் எதோ ஒரு புதிய செய்தி கிடைத்ததை உணர்ந்தார்கள். ஹோட்டலுக்கு வெளியே வந்து,

“ஆமாண்டா மச்சி. இவர் சொல்றமாதிரி பாத்தா, நம்மளோட நிறைய நேரம் டென்ஷன்லேயே போயிருதுடா. அப்புறம் நார்மல் மூடுக்கு வர ஒரு மணி நேரம் செலவாகிருது. இதுல கேட்ட பேரு வேற.” என்றான் சாமி.

“இவர் கிட்ட எதோ ஒரு மாற்றுப் பார்வை இருக்குடா” என்று முதல் முறையாக அஷ்வின் சர்டிபிகேட் கொடுத்தான்.


மணி காலை 1௦, நேராக டிபன் முடித்து விட்டு, ஒருவார அழுக்குத் துணிகளை துவைக்கப் போனார்கள். லேசாக மனமும் வெளுத்துக்கொண்டு இருந்தது.




அத்தியாயம் 3: தேன்க்லஸ் ஜாப்




மார்டின் ஆஸ்பத்திரி வாசம் மற்ற மூவருக்கும் ஒரு பொறுப்புடன் கூடிய பொழுதுபோக்காக இருந்தது. மார்டின் அம்மா செல்போனில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டே இருந்தான். “வேலை டைட்டாக இருக்குமா.. இந்த மாசம் டார்கெட் கொஞ்சம் அதிகமா இருக்கு”. இப்படி சில காரணங்கள்.

வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையாவது மார்டின் வீட்டிற்கு செல்வது வழக்கம். முதன் முறையாக மூன்று வாரம் கழித்தும் அவன் வீட்டிற்கு செல்லவில்லை. செல்போன் இருந்ததால், ஒருவழியாக சமாளித்தான். மற்ற மூவரும் சேர்ந்து ஷிப்ட் முறையில் அவனுடன் இருந்தார்கள்.

சரியாக 25ம் நாள், மார்டினை செக்கப் செய்த டாக்டர் டிஸ்சார்ஜ் செய்யச்சொல்லி அனுப்பினார். அடி பட்டதில் இடது காலில் ஆழமான தழும்பு மற்றும் உடம்பில் சில இடங்களில் காயத்தின் அடையாளம். கால் மட்டும் சற்று விகாரமாக இருந்தது. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று தேற்றிக்கொண்டான்.

இந்த வாரமாவது வீட்டிற்க்குச் செல்லலாம் என்று நினைத்த மார்டினுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை கிடைக்கும்போல இருந்தது.

இந்த ஆஸ்பத்திரி வாசத்தில் இவர்கள் நட்பு சற்று ஆழமானது. நால்வரும் ஒன்றாக முடிவெடுத்து ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம் என்று நினைத்தார்கள். மேன்ஷன் வாழ்க்கை சற்று இருக்கமாக இருந்தது. இவர்கள் மேன்ஷனில் தங்கி இருப்பது, மார்டின் வீட்டார் வந்து செல்லாததற்கும் ஒரு காரணமாகப் போய்விட்டது.

மதுரை டிவிஎஸ் நகர் அருகில் இருக்கும் அழகப்பன் நகரில் ஒரு வீடு அமைந்தது. வசதி குறைவாக இருந்தாலும், பேச்சுலர் வாழ்க்கைக்கு எந்த வீடும் ஒரு வசந்த மாளிகை. ஏனென்றால், பேச்சுலருக்கு அநேகமாக ஒருவரும் வீடு வாடகைக்கு தருவதில்லை.

ஆஸ்பத்திரி பிசியோதெரபி ஆலோசகர் சொன்ன பயிர்ச்சி எல்லாம் ஒழுங்காக செய்தான் மார்டின். ஒரு தனியார் நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை மேலாளராக மார்டினுக்கு வேலையும் கிடைத்தது. முன்பிருந்ததை விட வேலை அதிகம். சம்பளமும் தான்.

அர்ஜுனின் பிரெண்ட் ஒருவர் மதுரைக்கு வந்திருந்தார். அவர் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தார். ஒரு மாதம் வேலை. ஒரு மாத காலமும் அந்த ஹோட்டலிலேயே தாங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. 

இவர்தான் இவர்கள் நான்கு பேரின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்பட அந்த இறைவன் அனுப்பிய தூதர். இப்படித்தான் நமது வாழ்வில் பலர் வந்து செல்கிறார்கள். நமக்கு அதன் Purpose எளிதில், விரைவில் விளங்குவதில்லை.

மார்டின் நன்றாக நடக்கத்தொடங்கி வேலைக்கும் செல்லத் தொடங்கிவிட்டன். ஒருநாள் மாலை அர்ஜுன் தனது பிரெண்டை வீட்டிற்கு அழைத்திருந்தான். அவர் பெயர் ஜெயபால். எல்லோரும் ஜெய் என்று கூப்பிடுவார்கள். நால்வரையும் விட மூத்தவர். அவர் ஒரு வணிக மேம்பாட்டு ஆலோசகர். மதுரையில் நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை சீர்செய்யும் பெரும் பொறுப்புடன் அங்கு வந்துள்ளார்.

அன்றைய மாலைப்பொழுது இந்த நால்வருக்கும் ஒரு முக்கியத் தருணம். மாலை 7 மணிக்கு அர்ஜுன், ஜெய்யுடன் பைக்கில் வீட்டிற்கு வந்தான். மார்டின், அஸ்வின், சாமி மூவரும் இவருக்காக வேலையை முடித்துக்கொண்டு முன்பே வந்திருந்தார்கள். ஜெய் பெயருக்கு ஏற்றார்போல ஜெய்ஜாண்டிக்காக இருப்பவர். ஆறடி உயரம், உயரத்திற்கு ஏற்றார்போல உடல்வாகு. ஆனால் பேசத்தொடங்கி விட்டால், சுவாரசியமாக இருக்கும். சுறுசுறுப்பும் நிதானமும் கலந்த ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன்.

அவர் உள்ளே நுழைந்ததும், கேஷுவலாக தரையில் அமர்ந்துகொண்டார். மற்றவர்கள் பதறினார்கள். ஒரு சேர் மட்டும் இருந்தது. அதில் அமரச் சொன்னார்கள். ஜெய் மறுத்து எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்றார். அவர் முதலில் கேட்ட கேள்வி. இன்னும் 5 வருடங்களில் “நீங்கள் என்ன பொஷிஷனில் இருக்கப் போகிறீர்கள்?”. ஒருவருக்கும் தெளிவான பதில் இல்லை.

“நீங்க நாலு பேருமே சேல்ஸ் ஜாப்ல இருக்கீங்க. நாலு பேருமே வேற வேற நேச்சர் சேல்ஸ். சர்ப்ரைசிங் காம்பினேஷன். ஆனா ஒரு உண்மை தெரியுமா? செல்ஸ்ல இருக்கிறது ஒரு வேட்டை நாய் வேலை மாதிரி. விரட்டி விரட்டி வேட்டையாடச் சொல்வாங்க. நீங்க கொஞ்சம் ஸ்லோஆனா, உங்கள ஓரங்கட்டி விடுவாங்க. இது ஒரு தேன்க்லஸ் ஜாப்” என்றார்.

அவர் இப்படிச் சொன்னது ஒரு இறுக்கமான நினையை உண்டாக்கியது. என்றாலும், அவர்களுக்கே உரிய பாணியில், வேறு விஷயங்களில் பேச்சை போகவிட்டு அன்றைய டின்னரை ஒன்றாக முடித்துக்கொண்டார்கள். அர்ஜுன் மட்டும் டல்லாக இருந்தான். ஜெய்யை ஹோட்டலில் விட்டுவிட்டு வந்த அர்ஜுன், மற்ற மூவரிடமும் “சாரிடா மச்சி. அவர் இப்படி பேசுவாருன்னு எதிர் பார்க்கல. கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டார். கடுப்பாய்ட்டேன். சாரி மச்சி” என்றான். மார்ட்டினும், அஸ்வினும் அமைதியாக இருந்தார்கள்.

சாமி மட்டும் “அவர் சொன்னதில் என்னடா தப்பு இருக்கு? அவரைப் பார்த்தா தலைக்கனம் புடிச்சவர் மாதிரியோ, தேவை இல்லாம அட்வைஸ் பன்ற மாதிரியோ தெரியல. எதோ ஒரு அக்கறைல சொன்ன மாதிரித் தான் இருந்தது” என்றான்.

அஸ்வின், “நீ மூடு. நமக்கு என்னாடா கொறைச்சல்? நல்லாத்தானே இருக்கோம்? சும்மா இப்படி ஏதாச்சும் சொல்லி வெறுப்பேத்துறது இவிங்க பொழப்பு. இதுக்கு அர்ஜுன் என்ன பண்ணுவான்?” என்றான். மேலும், “அவருக்கு சேல்ஸ்னா என்னான்னு தெரியுமாடா? நம்ம இல்லன்னா எல்லா கம்பெனியும் தயாரிச்சத அடுக்கி வச்சு பூஜதான் போடணும்” என்று பொரிந்து தள்ளினான்.

பொறுமையாக இருந்த அர்ஜுன், “டேய் அவரு நம்மள மாதிரி செல்ஸ்ல இருந்து படிப்படியா மேல வந்தவர்டா. அவர எனக்கு நல்லாத் தெரியும். மெட்ராஸ்ல எங்க மாமா வீட்டு எதிர்லதான் இருக்காரு. அவர் வீட்ல அவர் வாங்கின அவார்ட் வைக்க ஒரு தனி ஷோகேஸ் கூட இருக்கு” என்றான்.

இது அவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அட நம்ம ஆளு என்று நினைத்து அவரைப்பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் அஸ்வின் தனது நிலையில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை.

“என்னதான் இருந்தாலும் அவர் ஒரு புது ஆளுங்ககிட்ட இப்படி பேசி இருக்கக்கூடாது. எதோ அர்ஜுனுக்காக சும்மா இருந்தேன்” என்றான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஜெய் அர்ஜுனுக்கு போன் செய்தார்.

“சாரி கைஸ். நான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்னு நினைக்கிறேன். அர்ஜுன், ஒன் பிரெண்ட் எல்லார்டையும் சாரி சொல்லிடு.” என்று சொல்லி கட் செய்துவிட்டார்.

அதுவரை அமைதியாக இருந்த மார்ட்டின். “டேய் அவர் சொன்னதில தப்பு ஒன்னும் தெரியலடா. எனக்கு எதோ அந்த ஜீசஸ் ஒரு நல்ல வழிகாட்டிய அனுப்பி இருக்கார்ன்னு தோணுது. அவர் மாதிரி ஆளுங்ககிட்ட பழக நமக்கு எங்க சான்ஸ் இருக்கு? பிராங்கா பேசுறவங்கள நம்பலாம்டா” என்றான்.

நால்வரும் சற்று யோசிக்கத் தொடங்கினார்கள். அவர் கேட்ட முதல் கேள்வி மனதில் குடைந்துகொண்டே இருந்தது. முதல் நிலை சேல்ஸ்மேன். அப்புறம் சூப்பர்வைசர் மாதிரி முதல் நிலை (கடை நிலை) மேனேஜர். அப்புறம்? அதற்கு மேல உள்ள எல்லா பதவிகளையும் பல நிறுவனங்களில் IIM மாதிரி டாப் காலேஜ்ல MBA படிச்சவங்க புடிச்சுக்குவாங்க. இப்படியே, வாழ்க்கையை ஓட்டுறதுல என்ன சார்ம் இருக்கு என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். மணி 2, அகால வேலை. 

அவர்களுக்கு ஒரு புதிய விடியல்.

அத்தியாயம் 2: புரோட்டா, சினிமா, விபத்து..



ரவு 8:30 மணி, மாலை 5 மணிவரை ஓய்ந்து இருந்த நகரம் புத்துயிர் பெற்ற பூரிப்பில் இருந்தது. பேசி வைத்தது போல, நால்வரும் சரியாக பாண்டியன் மெஸ்ஸில் ஆஜர் ஆகி இருந்தார்கள். புரோட்டாக்கள் ஆர்டர் பறந்தது. மதுரை இரவு உணவகங்கள் உங்கள் விரலை சுவைக்க வைத்துவிடும்.

பத்து மணிக்கு துவங்கும் படத்துக்கு அரை மணி முன்னதாகவே வந்துவிட்டார்கள். மாப்பிள்ளை விநாயகர் அண்ட் மாணிக்க விநாயகர் தியேட்டர். ஆங்கிலப் படங்களை குத்தகைக்கு எடுக்கும் திரையரங்கம். படம் துவங்குவதற்கு முன்னாலும், இடைவேளைகளிலும் இவர்கள் ஒலிக்கச்செய்யும் ஆங்கிலப் பாடல்களே பட்டையைக் கிளப்பும். டீசன்டான படங்களை மட்டும் இங்கு திரையிடுவார்கள். 

அன்றைய வரவு டெர்மினேட்டர் – II, அர்னால்டுக்கு மதுரையிலும் ரசிகர்கள் இருந்தனர்.

படம் முடிந்து திரும்பும்போது, அஸ்வின் “ஹேய்.. இங்க பார்ரா.. எங்க கம்பெனி விளம்பரம்” என்று ஒரு பெரிய போர்டை காட்டினான். மும்பைப் பெண் ஒருத்தி, அஸ்வின் விற்கும் ஒரு பொருளை கையில் வைத்துக்கொண்டு காதுக்கும் காதுக்கும் சிரித்தபடி இருந்தாள். அதை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டியதால், லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ட்ராக்டர் பக்கத்தில் பைக் உரசி, அப்படியே மார்ட்டின் சரிந்தான்.

பைக்கின் பின் சக்கரத்தில் ட்ராக்டரின் பெரிய பின் சக்கரம் ஏறி இறங்கியது. “அம்மா” என்ற ஒரு பெரிய அலறலுடன், மார்டின் துடித்துக் கொண்டிருந்தான்.

“டேய்.. மச்சி.. எப்படியாச்சும் காப்பாத்துடா..” என்று சன்னமாக முனகிக்கொண்டே இருந்தான்.

அர்ஜுனுக்கு மார்டின் ஏற்கெனவே நண்பன். அஸ்வினும், சாமியும் அன்று காலைதான் அறிமுகமானார்கள்.

மார்டின் இடது கால், பைக்கில் நன்றாக மாட்டிக்கொண்டு விட்டது. அவர்கள் பைக்கில் இருந்து மார்டினை விடுவிக்க முயற்சி செய்த போது வழியால் மார்டின் மேலும் அலறினான். பத்து பதினைந்துபேர் கூடிவிட்டார்கள். ட்ராக்டர் ஒட்டிவந்தவன் ஆளைக் காணோம்.
ஒரு வழியாக மார்டினை விடுவித்து, ஒரு ஆட்டோவை நிறுத்தி அவனை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். தொட்ட இடமெல்லாம் ரத்தம். பை பாஸ் ரோட்டில் இருந்த ஒரு மருத்துவமனையில் நர்ஸ் மட்டும் இருவர் இருந்தார்கள்.

“டாக்டர் இப்ப வரமாட்டார். நாளைக்கு காலைலதான் வருவார். நீங்க எதுக்கும் ஜி.ஹெச்சுக்கு தூக்கிட்டு போங்க” என்று அட்வைசித்தாள்.
அர்ஜுனுக்கு பொத்துக்கொண்டு வந்தது.

ஒருவழியாக தேனீ ரோட்டில் இருந்த ஒரு ஹாஸ்பிட்டலில் முதலுதவி கொடுத்தார்கள். அவர்களே, ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மதுரையில் உள்ள ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். உள்ளே நுழைந்ததுமே, போலீஸ் விவரங்களைக் கேட்டு குறித்துக் கொண்டதும், மூவருக்குமே பக் பக் என்று அடித்துக்கொண்டது.

அஸ்வின், சாமி, அர்ஜுன் மூவரும் மார்டின் கூடவே இருந்தார்கள். அவரவர் இருப்பில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து உடனடித் தேவைக்கு பணம் செலுத்தினார்கள். ஆனால் ஒன்றும் பேசிக்கொள்ளவே இல்லை. யார் செய்த தப்பு இது? அஸ்வின் மட்டும், தன்னைத் தானே நொந்து கொண்டான். அவனுக்கு அடிவயிற்றில் கொஞ்சம் கலக்கவும் செய்தது.

ICU-விற்குள் மார்டின். காலை 5:30 மணிக்கு ICU-வில் இருந்து “மார்டின் கூட வந்தவங்க யாருங்க” என்று ஒரு நர்ஸ் கூவினாள். விருட்டென்று மூவரும் அந்த நர்ஸ் அருகில் சென்றார்கள்.

“டாக்டர் கூப்பிடுறார். செருப்பை கழட்டிட்டு உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

சாமிக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. மூவரும் உள்ளே சென்றார்கள்.

“இவர் என்ன வேலை பாக்கறார்?” என்றார் டாக்டர்.

“நாங்க நாலுபேரும் சேல்ஸ்ல இருக்கோம் சார்”

“பிரெண்ட்ஸா?”

“ஆமாம் சார்”

“பயப்பட ஒன்னும் இல்ல. நல்ல வேளை நெர்வ்ஸ் டேமேஜ் ஆகல. ஆனா அதிகமா அடி பட்டு காயம் ஆகியிருக்கு. நார்மல் வார்டுக்கு மாத்திடுறேன். ஆனா, ஒன் மந்த் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும்” என்றார்.

அர்ஜுன் கிட்டத்தட்ட அழுதே விட்டான். “தேங்க்ஸ் டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி மார்ட்டினை தூரத்தில் இருந்தே பார்த்தார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் மார்டின் இருந்தான்.

ஆல் இஸ் வெல் என்பது போல, இந்த ஒரு விபத்து, இந்த நால்வருக்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

நார்மல் வார்ட்.. “எங்க வீட்ல யாருக்காச்சும் சொன்னியாடா?” மார்டின் அர்ஜுனிடம் கேட்டான்.

“இல்ல மச்சி. சொல்ல வேணாம். கொஞ்சம் சரியாகட்டும்.”

“பணத்துக்கு என்னடா பண்றது?”

“நாங்க பாத்துக்குறோம் மச்சி” சாமி சொன்னான்.

“அதுல்லாம் வேணாம்டா. எங்க அப்பாட்ட சொல்லிரலாம்”.

“டேய். நாம நாலுபேரும்தான் சேர்ந்து போனோம். இதுல வர்ற எல்லாத்தையும் பங்கு போட்டுக்குவோம். மொதல்ல ஒன் பாஸுக்கு மட்டும் சொல்லி லீவு போடுடா” என்றான் அஸ்வின்.


இனி மாற்றம்..!